Tuesday, February 15, 2011

தேமல்

தேமல் - அழகுக்கு அழகு சேர்க்க உதவும் அழகு குறிப்புகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். அகம் அழகாய் இருந்தும் முகம் அழகாய் இல்லையே என வருந்துபவரா நீங்கள்?

முகப் பொலிவு பெற, கரும் புள்ளிகள் மறைய, முகப்பரு நீங்க, கண்ணில் கருவளையம் நீங்க, தோல் வியாதிகள் குணமாக, உடல் பொன்னிறமாக, பற்கள் வெண்ணிறமாக என இதோ உங்களுக்கு உதவும் அழகுக் குறிப்புகள் அனைத்தும் இங்கே!

மேனி மினுமினுப்பாக தினமும் இரவில் படுக்கப் போகும் முன் தேன், குங்குமப் பூ மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம்.

தோலில் சொறி, சிரங்கு, புண் இவற்றால் கரும்புள்ளிகள் உள்ளதா? கரும்புள்ளிகள் நீங்க குப்பை மேனிக் கீரையை எடுத்து அதனோடு மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து மை போல அரைத்து தேகத்தின் மீது தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்து வர வேண்டும். ஒரு மாதத்திற்கு இப்படி செய்து வந்தால் கரும்புள்ளிகள் மறையும். அழகு கூடும். ”குப்பை மேனி” இருந்தால் மேனியின் கரும்புள்ளிகளுக்கு நீங்கள் சொல்லலாம் ”குட்பை”.

பொன்னாங்கண்ணிக் கீரை நமது உடம்பை ”பொன்னாக” மாற்றும் சக்தி இதற்கு உண்டு. பொன்னாங்கண்ணிக் கீரையை நெய் விட்டு வதக்கி, மிளகும், உப்பும் சேர்த்து 48 நாட்கள் சாப்பிட்டு வர உடல் அழகு பெறும்.

தேகம் பொன்னிறமாக ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்

உங்கள் முகத்தின் வசீகரம் கூட வெள்ளரி பிஞ்சு கொண்டு தினமும் மசாஜ் செய்யுங்கள். இது கண்களின் கீழ் உள்ள கருவளையத்தையும் நீக்க வல்லது.

அழகு குறிப்புகள்

மேனி பளபளப்பு பெற்று சிவப்பாக மாற வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு பழம் மற்றும் பெரிய நெல்லிக்காய் சாப்பிடலாம்.

முகம் பிரகாசமடைய கானா வாழை மாவிலை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் தடவி காயவிட்டு அரை மணி நேரம் கழித்து கழுவவும்.

உடல் சிவப்பாக மாறி, அழகு கூட வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம் பூ சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வர சிவப்பாக மாறும்.

தோல் வழவழப்பாக மருதாணி இலையை அரைத்து தேய்த்து வந்தால் வழவழப்பு அதிகரிக்கும்.

முகச் சுறுக்கம் மறைய முட்டைக் கோஸ் சாறை தடவி வரலாம்.

படர் தாமரை வந்தவர்கள் சிறிது மிளகை நெய் விட்டு அரைத்து தடவினால் படர்தாமரை குணமாகும்.

முகப்பரு இருக்கிறதா? கவலை விடுங்கள். சுக்கை அரைத்து விழுதை முகப் பருக்களின் மீது அடிக்கடி தடவி வர சில நாட்களில் முகப் பரு நீங்கி குணம் காணலாம்.

முகப்பரு

பாசிப்பயறு மாவுடன் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு சேர்த்துத் தடவினால் முகப்பரு நீங்கும்.

100 மில்லி நல்லெண்ணெயோடு 15 கிராம் மிளகுப்பொடி சேர்த்து சூடாக்கி முகப்பருக்கள் மீது பூசினால் முகப்பரு குறையும்.

தேமல் மறைய சுக்குடன் சிறிது துளசி இலைகளை வைத்து மையாக அரைத்து தேமல் மீது பூசி வர தேமல் மறைந்து, சருமம் இயல்பு நிலை அடையும்.

உதடு வெடிப்பு நீங்க: பனிக்காலங்களில் ஏற்படும் உதடு வெடிப்பு நீங்க கரும்புச் சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதடு வெடிப்பு குணமாகும்.

வெயில் காலங்களில் ஏற்படும் வேர்க்குரு மறைய சாதம் வடித்த கஞ்சியை தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் போதும்.

கை, மார்பு, தொடைப் பகுதிகளில் ஆங்காங்கே தேமல் இருக்கிறதா? மணத்தக்காளிக் கீரையின் சாற்றை எடுத்து உடம்பில் தடவி, அரை மணி நேரம் ஊற வைத்து வெது வெதுப்பான நீரில் குளித்து வர உடலின் நிறம் மாறும். அழகு மேம்படும்.

முகத்தில் இருக்கும் கரும் புள்ளிகள், தழும்புகள் மற்றும் முகப்பருக்கள் நீங்க அவரை இலை சாறு தினமும் முகத்தில் பூசி காயவிட்டு குளித்து வந்தால் முகம் பளபளக்கும்.

அழகுக் குறிப்புகள்

முகம் பளபளக்க நன்றாக பழுத்த நாட்டு வாழைப் பழத்தை ஆலிவ் ஆயில் சேர்த்து பிசைந்து முகத்தில் தடவி 1 மணி நேரம் கழித்து முகம் கழுவி வரலாம்.

சந்தனம் முகத்தில் அடிக்கடி பூசி காயவிட்டு முகம் கழுவ சூட்டினால் முகத்தில் வரும் சிறு சிறு கட்டிகள் வரவே வராது.

பற்களில் மஞ்சள் நிறமா? கரிசலாங்கண்ணியின் வேரைக் கொண்டு பல் துலக்குங்கள். பல் துலக்கிய பின், கீரையை ஒரு பிடி எடுத்து மென்று தின்று ஒரு டம்ளர் தண்ணீர் அருந்தி வரவும். நாளடைவில் பற்களில் உள்ள மஞ்சள் கறை மறைந்து பற்களின் அழகு அதிகரிக்கும்.

பல்

பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்குவதில் வல்லாரை கீரையும் உதவுகிறது. வல்லாரைக் கீரையை பற்களின் மேல் வைத்து தேய்த்து வந்தால் மஞ்சள் கறை நீங்குவதோடு பற்கள் வெண்மையாக பளீரிடும்.

தீப்புண்ணால் முகத்தில் ஏற்பட்ட தழும்புகள் குறைய பெரு நெல்லிக் கனியை தேனில் ஊற வைத்து  தினமும் சாப்பிட்டு வாருங்கள். தழும்புகள் மறைந்து அழகு கூடும். இரத்த்த்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவையும் இது உயர்த்தும் ஆற்றல் கொண்டது.

பித்த வெடிப்பு - மென்மையான பாதம் வேண்டுமா?

பித்த வெடிப்பு - மென்மையான பாதம் வேண்டுமா?

பெண்கள் தங்கள் முகத்தை பராமரிக்க செலவிடும் நேரத்தில் சில நிமிடங்கள் கூட, தங்கள் பாதங்களை கவனிக்க செலவு செய்வதில்லை. பெரும்பான்மையான பெண்களுக்கு பாதங்களில் ஏற்படும் பிரச்னை பித்த வெடிப்பு. என்ன மருந்து போட்டாலும், இந்த பித்த வெடிப்பு மட்டும் போகவே மாட்டேங்குது என்று அலுத்துக் கொள்பவர்கள் ஏராளம்.

பித்தவெடிப்பு போவதற்கான டிப்ஸ் இதோ உங்களுக்காக…

* பப்பாளி பழத்தை நன்கு நைசாக அரைத்து, அதை பாதங்களில் வெடிப்பு உள்ள பகுதிகளில் தேய்க்க வேண்டும். அவை உலர்ந்ததும், பாதத்தை தண்ணீரில் நனைத்து தேய்க்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால், பித்த வெடிப்பு குணமாகும்.

* மருதாணி இலைகளை நன்றாக அரைத்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் தேய்த்து உலர விட வேண்டும். பின், தண்ணீரால் கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் நாளடைவில் பித்த வெடிப்பு குணமாகும்.

* கால் தாங்கும் அளவுக்கு தண்ணீரை சூடுபடுத்தி, அதில் சிறிது உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்க்க வேண்டும். அந்த தண்ணீரில் பாதத்தை சிறிது நேரம் வைத்திருந்து, பின், பாதத்தை ஸ்கிரப்பர் போன்ற சொரசொரப்பானவற்றால் தேய்த்து கழுவினால் பாதத்தில் காணப்படும் கெட்ட செல்கள் உதிர்ந்து விடும். இதனால் பித்த வெடிப்பு ஏற்படுவதும் தவிர்க்கப் படுவதோடு, பாதம் மென்மையாகவும் இருக்கும்.

* வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றுடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து அரைக்க வேண்டும். இந்த கலவையில் விளக்கெண்ணெய் சேர்த்து, பித்த வெடிப்பு உள்ள இடங்களில் பூசினால், பித்த வெடிப்பு நீங்கும்.

* தரம் குறைவான காலணிகளைப் பயன்படுத்துவதாலும், சிலருக்கு பித்த வெடிப்பு ஏற்படும். எனவே காலணிகளை வாங்கும் போது, விலை மற்றும் டிசைனை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், தரமானது தானா என்பதை கவனித்து வாங்குவது நல்லது.

* விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை சமஅளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் சிறிது மஞ்சள் தூளை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, அதை பாதத்தில் வெடிப்பு உள்ள இடங்களில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்வதால், பித்த வெடிப்பு குணமாகும்.

* வேப்ப எண்ணெயில், சிறிதளவு மஞ்சள் பொடியை கலந்து பேஸ்ட் போல் குழைத்து, பித்த வெடிப்பு உள்ள இடத்தில் தடவினால், பித்த வெடிப்பு குணமாகும்.

* இரவு நேரத்தில் தூங்க போவதற்கு முன், காலை நன்றாக தேய்த்து கழுவி, சிறிது தேங்காய் எண்ணெய் சேர்த்து தூங்கப் போகலாம். இப்படி செய்தால் பித்த வெடிப்பு வராமல் தடுக்கலாம்.

* குளித்து முடித்ததும், பாதங்களை ஈரமில்லாதவாறு துணியால் துடைக்க வேண்டும். பின், பாதத்தில் சிறிது விளக்கெண்ணெய் தேய்த்து வந்தால் வெடிப்பு வராமல் தடுக்கலாம்.